Tuesday, August 23, 2011

ஒரு யானையும் சில எறும்புகளும்



ஒரு காட்டில் எறும்பு கூட்டம் ஒன்று வசித்து வந்தது. ஒரு முறை மதம் பிடித்த யானை ஒன்று அந்த வழியாக தாறுமாறாக ஓடி வந்தது. எல்லா எறும்புகளும் தலை தெறிக்க ஓடியது உயிர் பிழைக்க. ஆனாலும் நிறைய எறும்புகள் யானையின் காலடியில் பட்டு இறந்து போனது. ஒருசில எறும்புகள் யானையின் மீதே ஏறின. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் முதுகு வரை சென்றது. அந்த எறும்பைப் பார்த்து கீழே இருந்த எறும்பு கத்தியதாம் “டேய் மாப்ளே விடாதடா போட்டு அமுக்குடா அவனை” என்று. இந்த ஜோக்கைப் பத்திரிக்கையில் படிக்கும் போது எல்லோருக்கும் சிரிப்பு வருவது போல எனக்கு வரவில்லை. மனதின் ஊடே ஒரு வலி நிரந்தரமாய் ஆக்கிரமித்து இருந்தது.

வலிமை மிகுந்தவர்கள் எதையும் மதிக்காமல் தான் செய்வதே சரியென்று மதம்கொண்ட யானையைப் போல அலைவதும், வலிமையற்றவர்கள் அவர்கள் பிடியில் சிக்கி அப்பாவிகளாய் மடிந்து போவதும் எப்போதும் தொடர்கதையாகவே நடந்து வருகிறது.

என் அம்மா சாகப்போகிறாள். வீட்டின் முன்கூடாரத்தில் படுக்க வைத்திருந்தார்கள். இன்னும் இரண்டு நாட்களா, மூன்று நாட்களா தெரியாது. ஆனால் அவ்வளவு தான் என்று டாக்டர் சொல்லிவிட்டார். சின்னம்மாவிற்கு சொல்லிவிட்டார்கள். ஆனால் இன்னும் வரவில்லை. நான் அம்மா என்று சொல்வது என் பெரியம்மாவை. சின்னம்மா என்று சொல்வது தான் எனக்கும் என் தங்கைக்கும் உண்மையான அம்மா.

மாறிவிட்டது, எல்லாம் மாறிவிட்டது. பணம் எண்ணும் பேய் ஒரு மனிதனை பிடித்து விட்டால் அது மலம் திண்ணும் பன்றியைப் போல வதவதவென குட்டிகளைப்போட்டு ஒவ்வொரு செல்லிலும் பரவி மூளை மனம் உடம்பு எல்லாவற்றையும் அரித்து விடுகிறது.

எங்களை படிக்க வைத்தது வளர்த்தது எல்லாமே எங்கள் பெரியம்மா தான். அம்மாவின் நிழலைக்கூட நாங்கள் அதிகம் தீண்டியதில்லை. அத்தனையும் வேதனை.

உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்து சென்றனர். அப்பா பெரியம்மாவின் பக்கத்திலேயே மிகுந்த துக்கத்துடன் அமர்ந்து கொண்டிருந்தார்.

என் பெரியம்மாதான் அப்பாவின் முதல் மனைவி. பெரியம்மாவை கல்யாணம் செய்து வந்தபோது அப்பாவிற்கு ஒரு பாரம்பரிய வீடு மட்டுமே இருந்த்து. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பெரியம்மா டீச்சர் டிரெயினிங் முடித்து வேலைக்கு காத்திருந்தார்.

கல்யாணத்திற்கு பின்னால் வேலை போய்விட்டது. மிகுந்த சிரமத்திற்கிடையே என் பாட்டி அப்பாவிடம் அம்மாவின் நகைகளை விற்று சமாளிக்கலாம் என்று சொன்னார். அப்பாவும் அம்மாவிடம் நகைகளைக் கேட்க, அம்மாவோ எல்லாவற்றையும் தருகிறேன், ஆனால் அதை விற்று நம் வீட்டின் முன்னால் ஒரு மளிகைக்கடை வையுங்கள். பின்னர் சம்பாதிக்கும் போது அதை திருப்பி செய்து கொடுத்துவிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். அப்பாவும் தலையை ஆட்டிவிட்டு நகைகளை விற்று மளிகைக் கடை ஆரம்பித்தார். ஓரளவு வருமானம் வர ஆரம்பித்த்து. ஆண்டுகள் ஓடின.

ஆனால் பிரச்சனை வேறு விதத்தில் முளைத்தது. நான்கு வருடங்களாக குழந்தையில்லை. மருத்துவத்தில் பெரியம்மாவிற்கு கரு தங்காது என்று சொல்லிவிட்டார்கள். நாட்டு வைத்தியம், கோயில், குளம் என்று சுற்றி எதுவும் நடக்கவில்லை. பாட்டி இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொன்னார். அப்பா முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார். ஆனால் தனக்கு ஒரு பேரப்பிள்ளை வராதா என்று புலம்பியபடி சோறு தண்ணி இல்லாமல் இரண்டு மூன்று நாட்கள் கிடந்து ஜெயித்து விட்டாள்.

பெரியம்மா ஒப்புக்கொள்ள என் அம்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் அப்பா. அம்மா அவர்கள் குடும்பத்தில் நாலாவது பெண். ஒரு பெண் இருந்தாலே முடியாத வறுமையில் எப்படியோ மூன்று பெண்களை தள்ளிவிட்ட தாத்தா, நான்காவது பெண்ணை இரண்டாம் தாராமாக்க முடிவெடுத்தார்.

பிறப்பிலிருந்தே வறுமையை கண்ட என் அம்மா எல்லாவற்றிலும் பணம் பணம் என்று அலைந்தாள்.அம்மாவிற்கு மூன்று விஷயங்கள் மிகவும் பிடிக்கும். முதலாவது விஷயம் பணம். இரண்டாவது பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள். மூன்றாவது பணம் சம்பாதிக்கத் தேவையான விஷயங்கள்/மனிதர்கள். அதைத்தவிர மற்றவையெல்லாம் அனாவசியம். பணம் என்றால் ஒரு வெறி. அந்த மதம்பிடித்த யானையைப்போல எதையும் பார்க்காமல் துவம்சம் செய்துவிடுவாள்.

திருமணமான கையோடு மளிகைக்கடைக்கு சென்று அமர்ந்துவிட்டாள். வியாபாரத்தில் அப்பாவிற்கு உதவி என்று போனவள் எல்லா முடிவுகளையும் அவளே எடுக்க ஆரம்பித்தாள். பின் நிர்வாகம் முழுமையும் ஆக்ரமித்துவிட்டாள். பெரியம்மாவோ காலையில் ஆரம்பித்து எல்லா வீட்டு வேலைகளையும் இடுப்பொடிய செய்வதுடன் என்னையும் தங்கை கீதாவையும் நன்றாக பார்த்துக்கொண்டார். கடையை சாத்திவிட்டு வரும் என் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் சாப்பாடு போட்டு கழுவி வைத்துவிட்டு பெரியம்மா படுத்து உறங்கும் நேரம் யாருக்குமே தெரியாது.

எப்படி இருந்தாலும் என்னிடமோ தங்கையிடமோ துளிகூட முகம் சுளிக்கமாட்டாள். எல்லா வேலைகளும் போக எங்களுக்கென்று தனியாக நேரம் ஒதுக்குவாள். அதிலே படிப்பு, விளையாட்டு, பாட்டு, கதைகள் என்று எவ்வளவு இனிமையான நேரங்கள் அவை.

எங்கள் அம்மாவுடன் நன்றாக பேசவேண்டும் என்றால் அது ஞாயிற்றுகிழமைகளில் தான் முடியும். மற்ற நாட்களில் நாங்கள் எழும் முன கடைக்கு சென்றால் நாங்கள் உறங்கியபின் தான் வருவாள்.

அம்மாவின் பிறந்த வீட்டு வறுமை அவளுக்கு பணத்தையே பிரதானமாகக் காட்டியது. பணத்தை பெரிதாக கருதியவர்களுக்கு குடும்பம் பெரிதாக அமையாது.

என் அம்மாவின் எண்ணம் போலவே பணம் சேர்ந்தது. ஒரு காலியிடம் நல்ல விலைக்கு வந்ததை தன் பேருக்கு வாங்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றாள் அம்மா. அப்பாவோ பெரியம்மாவிற்கு நகை செய்து போடவேண்டும் மறுபடியும் நிலம் வாங்கிக் கொள்ளலாம் என்றார். இருவருக்கும் பெரிய சண்டையாயிற்று, பெரியம்மாவோ வாய் திறக்கவேயில்லை.

ஆனால் அம்மாவோ முடிவெடுத்து விட்டாள். பெரியம்மா இனி இங்கிருந்தால் அவளுக்கென்று தனியாக எதுவும் செய்ய முடியாதென்று. அதற்கு ஒரு காரணமும் அமைந்தது. ஒரு ஞாயிற்றுக் கிழமை என்னையும் தங்கையையும் தன் பிறந்த ஊருக்கு அழைத்தாள். நாங்களோ பெரியம்மாவுடனே இருக்கிறோம். நீங்கள் மட்டும் சென்று வாருங்கள் என்று சொன்னோம். அம்மாவிற்கு கோபம் தலைக்கேறியது. கத்தத் தொடங்கிவிட்டாள்.

“அந்த மலடி சிறுக்கி சொல்லறதத்தாண்டா எல்லாரும் கேக்கறீங்க, பெத்த அம்மா நான் சொல்றத யாராவது கேக்கறீங்களா? அப்படி என்னதான் சொக்குபடி போட்டு வைச்சுருக்கிறாளோ தெரிய்லையே. நான் சொன்னா இந்த வீட்டு நாய்கூட மதிக்கமாட்டேங்குது. கடவுளே இதற்கெல்லாம் ஒரு முடிவு காலமே வராதா?” என்ற ஊரையே கூட்டிவிட்டாள்.

கடைசியில் நகை முடிவு தள்ளிப்போய் அம்மாவின் பெயரில் நிலம் வாங்க முடிவெடுக்கப்பட்டது. அதோடு அம்மா சமாதானம் ஆகவில்லை. “ஒன்னு இந்த வீட்டில அவ இருக்கனும் இல்லைன்னா நான் இருக்கனும். இப்பவோ முடிவு பண்ணிடுங்க” என்று பஞ்சாயத்து வைத்தாள்.

குடும்ப மானமே பெரிதென்று பெரியம்மா தனியாக போக முடிவெடுத்தாள். அப்பாவால் தடுக்க முடியவில்லை. இறுதியாக மாதம் இரண்டாயிரம் செலவிற்கு கொடுத்து விடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அம்மா அந்த இரண்டாயிரத்திற்கு அரை மனதோடு சம்மதித்தாள். ஒரு நல்ல நாளில் பெரியம்மா தனியாக ஒரு வாடகை வீட்டிற்கு சென்றாள்.

நல்லவர்கள் தனியாக செல்லும்போது தெய்வம் கூடவே வருமாம். பெரியம்மாவிற்கு அரசுப்பள்ளியில் வேலை கிடைத்த்து. அந்த செய்தி தெரிந்ததும் மாதம் இரண்டாயிரத்தை கொடுக்க கூடாது என்று அம்மா சொல்லிவிட்டாள். “அவதான் சம்பாரிக்கிறா இல்ல. அவளுக்கென்ன புள்ளையா குட்டியா. இங்க இருந்து எதுக்கு வெட்டியா இரண்டாயிரம்” என்று நிறுத்திவிட்டாள்.

பெரியம்மா எதற்கும் அஞ்சவில்லை. ஒரு வருடத்தில் தையல் இயந்திரம் வாங்கினாள். தைக்க ஆரம்பித்தாள். கூடை பின்னினாள். பள்ளி நேரம் போக என்ன்னென்வோ சிறு தொழில்கள் அனைத்தும் செய்தாள். வருடங்கள் ஓடின. அவள் சொந்த சம்பாத்தியத்தில் இடம் வாங்கி பெரிய வீடாக கட்டினாள். நானும் தங்கையும் சென்று தங்கினால் தனித்தனி அறைகள். புத்தக அலமாரி, கேம்ஸ், கம்ப்யூட்டர் என அசத்தினாள். நான் கல்லூரிக்கு சென்றவுடன் பைக், தங்கைக்கு ஸ்கூட்டி என்று வாகணங்கள் வேறு. ஆனால் கடைசி வரை பெரியம்மா நகை அணியவே இல்லை. அப்பாவாலும் வாங்கித்தர முடியவில்லை. பெரியம்மாவும் தனியாக எதையும் வாங்கவில்லை. எதை வாங்கினாலும் எங்களுக்கே கொடுத்தாள்.

அடுத்தவர்களை கெடுக்கும் எண்ணம் ஆகாசத்தில் சுற்றிவிட்டு அவர்கள் வீட்டுக்கே திரும்ப வருமாம் கொள்ளி வைக்க. அம்மாவின் சம்பாத்யம் இடம் வாங்கியதோடு முடிந்து போனது. ஊரில் நாலைந்து மளிகைக் கடைகள் வந்து விட்டது. அம்மாவின் வியாபாரம் குறைந்து விட்டது. வருமானமும் குறைய ஆரம்பித்த்து. அம்மா என்னென்னவோ செய்து பார்த்தாள். ஆனாலும் முடியவில்லை. பாட்டி இறந்து போனாள்.

நாங்கள் பெரியம்மா வீட்டிலேயே தங்க ஆரம்பித்தோம். அம்மா எரிமலையானாள். எங்கள் உறவே வேண்டாம் என்று கோபித்துக் கொண்டு ஊருக்கு சென்று விட்டாள். அப்பாவும் ஒருமுறைகூட சென்று கூப்பிடவே இல்லை. அவள் ஊருக்கு சென்ற உடன் கடையை மூடிவிட்டு அப்பா வேலைக்குப் போனார். தானே சமையல் செய்தார், துணி துவைத்தார். அவர் வேலைகள் எல்லாவற்றையும் அவரே செய்தார்.

பெரியம்மா எவ்வளவோ வற்புறுத்தியும் அம்மாவை போய் கூப்பிட மறுத்து விட்டார். பெரியம்மா வீட்டிற்கு வந்து தங்கவும் சம்மதிக்கவில்லை. பெரியம்மாவே போய் அம்மாவை கூப்பிட்ட போது கடுமையாக அவமானப்படுத்தி அனுப்பிவிட்டாள். அவள் சென்ற அடுத்த வருடத்திலேயே தங்கைக்கு நல்ல வரன் வந்தது. பெரியம்மாவே எல்லாம் பேசி முடித்து விட்டாள். அம்மாவை போய் அழைத்து வரும்படி அப்பாவிடம் கேட்டாள் பெரியம்மா. அப்பா மறுத்து விட்டார். மீண்டும் ஒருமுறை அம்மாவிடம் போய் கூப்பிட்டு அவமானப்பட்டே திரும்பினாள். ஆனாலும் தங்கையின் திருமணத்தை வெகு சிறப்பாக ஊரே மெச்சும்படி நடத்திக்காட்டினாள். நானும் கல்லூரி முதுகலைப் பட்டம் பெற்று வேலைக்கு போக ஆரம்பித்தேன். ஐந்து வருடங்கள் ஓடியது,

இறைவன் எப்போதும் நல்லவர்களை தன் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளப் பிரியப்படுவானாம். பெரியம்மாவிற்கு எங்கிருந்தோ வந்த இரத்தப் புற்று நோய் அவளை படுக்கையில் வீழ்த்தியது. இப்போது மரணப்படுக்கையில் இருக்கிறாள். இன்னும் இரண்டு நாட்களோ மூன்று நாட்களோ தெரியாது. சொல்லி அனுப்பியும் இரண்டு நாட்களாக வராத அம்மா மூன்றாவது நாள் தயங்கித் தயங்கி வந்தாள்.

உறவினர்கள் அம்மாவைச் சூழ்ந்து கொண்டு அழ ஆரம்பித்தனர். அம்மாவும் அழுதாள். எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்த்து. ஆனால் அங்கிருந்து வந்த பக்கத்து வீட்டு அத்தை உண்மையை புட்டு வைத்தாள். இங்கேயிருந்து எடுத்துச் சென்ற பணத்தில் இரண்டு வருடம் அம்மா சமாளித்திருக்கிறாள். ஆனால் பணம் கரைந்த்தும் பிறந்த வீட்டிற்கே பாரமாகி போய்விட்டாள். அங்கே யாரும் அவளை மதிக்கவில்லை. அப்பாவும் சென்று கூப்பிடாததால் இங்கே வரவும் முடியவில்லை. நன்றாக சாப்பாடு கூட கிடைக்காதாம். அந்த அத்தை சொன்னபோது எனக்கே பரிதாபமாகப் போய்விட்டது. ஆம் அம்மா ரொம்பவே மெலிந்திருந்தாள்.

அம்மா உள்ளே வந்தவுடன் கோபமாக அப்பா வெளியே சென்றார், என்ன செய்வாரோ என்று எங்களுக்கெல்லாம் பயம். வெளியே சென்றவர் அரைமணி நேரத்தில் திரும்பினார். கையில் ஒரு பை. வந்தவுடன் கண்களை மூடிப்படுத்திருந்த பெரியம்மாவை ஆவேசமாக எழுப்பினார். “மணி எழுந்திரு, எழுந்திரு மணி” என்று எழுப்பினார். பெரியம்மா மெதுவாக கண்விழித்தாள். உடனே அதே கோபத்தோடு போய் அம்மாவை இழுத்துவந்து பெரியம்மா முன் அமர வைத்தார். பின்னர் பையில் இருந்து வெளியே எடுத்தார். அத்தனையும் நகைகள். வளையல், கொடி, நெக்லஸ், தோடு என்று. “இந்த திருட்டு சிறுக்கி முன்னாடிதான் அத்தனையும் குடுக்கனும்னு நெனைச்சேன். நானே சொந்தமா வேலைக்குப்போய் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது. போட்டுக்கோடா. இதில யாரும் பங்கு கேக்க அருகதையே இல்லை” என்று கண்ணீர்விட்டு அழுதபடி எல்லா நகைகளையும் தானே போட்டு விடவும் செய்தார். பெரியம்மா அமைதியாக புன்னகைத்தாள். ஒரு கண்ணாடியை எடுத்த வரச்சொன்னார். கண்ணாடியில் கொஞ்ச நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின்னர் அப்பாவைப் பார்த்து சொன்னாள். “நான் என்ன செஞ்சாலும் கோவித்து கொள்ள மாட்டீங்களே” என்றாள்.

அப்பா அழுதார். “உன்னை கோவிச்சுக்க எனக்கு அருகதையே இல்லடா செல்லம்” என்று மறுபடியும் கதறினார்.

பெரியம்மா மறுபடியும் “எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுங்க, நான் என்ன செய்தாலும் ஒத்துக்கறேன்னு.” என்றாள்.

அப்பா தன் தலையில் அடித்து சத்தியம் செய்தார்.

பெரியம்மா புன்னகையுடன் அம்மாவை அருகில் அழைத்தாள். எல்லா நகைகளையும் கழற்றி அம்மாவை அணியச் சொன்னாள். அம்மா மறுத்தாள். அழுதாள்.

ஆனால் பெரியம்மா “என்னுடைய கடைசி ஆசை சில விஷயங்கள் இருக்கு. நான் யாருகிட்டயும் எதையும் கேக்கலை. ஆனால் உன்னிடம் கேக்கிறேன். இதை எப்படி வேனும்னாலும் வைச்சுக்க. எனக்காக நான் சொல்றதை செய்ய முடியுமா. மறுபடியும் இதைச்செய் அதைச்செய்னு சொல்றதுக்கு நான் இருக்கமாட்டேன். முதலும் கடைசியும் கேக்கிறேன் செய்வியா”. பெரியம்மா கெஞ்சினாள் அம்மாவிடம்.

அம்மாவோ முதல் முறையாக “அக்கா நான் உங்களுக்கு செஞ்ச துரோகத்துக்கு செறுப்பில அடிங்க வாங்கிக்கறேன். செத்துபோயிடுன்னு சொல்லுங்க இப்பவே ஆத்திலேயோ குளத்திலேயோ விழுந்துடுறேன். இதையெல்லாம் போட்டுக்க எனக்கு மனசு வருமாக்கா . இதைப்போட்டுக்கிட்டா நீ எழுந்து உட்கார்ந்திடுவேன்னு சொல்லு இப்பவே போட்டுக்கறேன்” என்று கதறினாள்.

ஆனால் பெரியம்மவோ இந்த ஒரு தடவை நான் சொல்றதை செய்யமாட்டயா என்று மீண்டும் கெஞ்சினாள். நானும் சென்று அம்மாவிடம் அணிந்து கொள், என்று சொன்னேன். பெரியம்மா முகத்தை பார்த்தபடியே எல்லா நகைகளையும் அணிந்து கொண்டாள். என்னை அழைத்து அம்மாவின் பீரோவில் உள்ள ஒரு பைலை எடுத்து வரச்சொன்னாள். நான் சென்று பெரியம்மா சொன்ன அடையாளமிட்ட பைலை எடுத்து வந்து கொடுத்தேன். அதில் இருந்து சில டாக்குமெண்டுகளை எடுத்து அம்மாவிடம் கொடுத்தாள். “மல்லிகா கவனமா கேட்டுக்கோ, இதில் இந்த பெரிய வீடு, இந்த வீட்டில இருக்கிற அசையும் மற்றும் அசையாத சொத்துக்கள், அதில்லாம இரண்டு பெரிய காலியிடத்தினோட பத்திரம், பேங்க் டெபாசிட் எல்லாம் எனக்கு அப்புறம் உன் பேருக்கு மாத்தி எழுதியிருக்கேன். பையனுக்கு நல்ல வேலை வாங்கி கொடுத்திட்டேன். பொண்ணுக்கு நல்ல இடத்தில கல்யாணம் பண்ணி வைச்சிட்டேன். அவருக்கு அவர் பூர்விக இடமும் கடையும் போதும். நான் சம்பாதித்த சொத்தில யாரும் பங்குக்கு வரமாட்டாங்க, மனுசங்க பணத்துக்கு ஆசைப்படறது இயல்புதான், உன்னை குறை சொல்லமாட்டேன். ஆனா நான் உங்கிட்ட ஒன்னு எதிர்பார்க்கிறேன். செய்வியா”, என்றாள்.

அம்மா முகம் வெளிறிப்போயிருந்தாள். முகம் களையற்று போய் ஒரு ஜடம் மாதிரி இருந்தாள். தலையை மட்டும் அசைத்தாள்.

அம்மாவின் முகம் பார்த்தபடி பெரியம்மா சொன்னாள், “நம்ம குடும்பத்தை விட்டுப்பிரியாம கடைசிவரைக்கும் எல்லோரும் ஒத்துமையா இருக்கனும். இதை மட்டும் எனக்காக செய்வியா”,

திடீரென உணர்வு பெற்றவள் போல “ ஐயோ அக்கா கண்டிப்பா செய்யறேன். நான் திருந்திட்டேன். எனக்கு சொத்தெல்லாம் எதுவும் வேண்டாம், நம்ம குடும்பத்தோட ஒன்னா இருக்கிற பாக்கியம் கிடைக்காதான்னு ஏங்கிக்கிட்டு இருந்தேன். எல்லாத்தையும் கொடுத்துட்டு நீ இப்படி படுத்திட்டியே அக்கா”, என்று அம்மா ஓலமிட்டு அழுதாள்.

அம்மாவின் அழுகை பெரியம்மாவின் செவிகளில் விழுந்தோ என்னவோ பார்வை அப்படியே உறைந்து போனது. வீடே அதிர்ந்த்து. எல்லோரும் கதறி அழுதனர். என் குரல் ஓங்கி ஒலித்தது, “அம்மா நீ சாகவில்லை, நீ சாகவில்லை, நீ எனக்கு மகளாக பிறப்பாய், நிச்சயம் மகளாகப் பிறப்பாய். வாழ்க்கை ஒரு சக்கரம். நீ எனக்காக வந்தேதான் ஆகவேண்டும்” மயங்கி சரிந்தேன்.



•••••••••§§§§§§§§














Wednesday, June 29, 2011

சமச்சீர் கல்வியென்பது.............

சமச்சீர் கல்வியென்பது
அந்தக்காலம்.

அரசன் மகனுக்கும்
ஆண்டி மகனுக்கும்
குருகுலத்தில்
ஒரே மரத்தடியில்
ஒரே மாதிரி உடையில்
ஒரே மாதிரி உணவில்
ஒரே மாதிரி கல்வி
சம வாய்ப்புகளில்.

இன்றைய காலம்
சமச்சீர் பாடத்திட்டம்
மட்டுமே.
ஒரே மாதிரி
படங்களும் பாடங்களும்
வெவ்வேறு சூழ்நிலையில்
வெவ்வேறு உடைகளில்
வெவ்வெறு உணவு வகைகளில்
வெவ்வேறு கலாச்சாரத்தில்.







Friday, June 24, 2011

எச்சங்கள்

ஒரு துப்பாக்கியிலிருந்து
புறப்படும் தோட்டா
பறந்து கொண்டிருக்கும்
பறவையை அடைவதற்குள்
செத்துப் போய்விடுகிறது
மனிதமும்
அதன் மகத்துவமும்
பின்னர்
பறவை சாவதும்
அதை உண்ட
மனிதன் சாவதும்
காலத்தின் எச்சங்கள்.







Thursday, April 28, 2011

படித்ததில் ரசித்தது......

1. பிறரை தண்டிக்க வாய்ப்பிருந்து அதற்கான நியாயமும் இருக்கையில் எவனொருவன் தன்னை மாய்த்துக் கொண்டாவது அவர்களை விட்டுக் கொடுக்கிறானோ அவன் உண்மையிலேயே ஏமாளியல்ல ஏற்றமுடையவன்,

2. தவறே செய்யாதவனைவிட பெருந்தவற்றைச் செய்து திருந்தி விடுகிறவனின் மனோபலம் பெரிதாயும் தெளிவாயும் இருக்கும்,

3. மறக்கக் கூடாதவை மறந்து போய் விடுவதும், மறக்க வேண்டியவை மறக்க முடியாமல் போவதும் ஒரு மனிதனின் வாழ்வில் சகஜமானதாய் அமையும்போது வாழ்க்கையின் தடமும் சர்வ சகஜமாய் மாறிப்போய் விடுகிறது.

4. சாதாரணமாக ஒருவனை வீழ்த்த முற்படும்போது அவனது பலத்தை அறிந்து அதை முறியடிக்க முயல்வதைவிட பலவீனத்தை அறிந்து அதை அதிகப்படுத்துவதுதான் சரியானது அல்லது லாபகரமானது.

5. வாழ்க்கையில் ஓர் அர்த்தத்தையும் மதிப்பையும் அளிக்கக்கூடிய ஒரே அம்சத்தை இழந்துவிடும் பட்சத்தில் எவ்வளவு ஆதாயம் கிடைத்தாலும் வாழ்க்கையே அர்த்தமற்றதாய் தான் அமைகிறது.

6. பல விஷயங்களில் பல சந்தர்ப்பங்களில் பெண்ணானவள் நம்பிக்கையை தரக்கூடியவளாய் இருந்தாலும் அந்தரங்க உறவின் பேரில் ஏற்படும் சிறு சந்தேகத்தால் அனைத்து நம்பிக்கைளும் அர்த்தமற்றுப் போவதோடு அவநம்பிக்கைக்கு உரியவளாகவே கருதப்படுகிறாள்.

7. ஆழப்பதிந்துவிட்ட வெறுப்புக்குமுன்னால் பிற விஷயங்களின் பேரிலான ஆராய்ச்சி குறுகிய எல்லைக்குள் நடக்கிறதே தவிர உபரி பரிமாணங்களை அடைவதில்லை.

8. பிறர் உண்டாக்கி வைக்கும் சந்தேகம் என்பது நமது அறிவுக்கு வைக்கப்படும் தீயைப்போன்றது. தெளிவான சிந்தனையும் துணிவும் உள்ளவர்களால் அறிவினாலேயே அத்தீயை அனைத்துவிட முடியும். பெரும்பாலானவர்கள் தீயின் பிரவேசத்தாலேயே இவ்விரண்டையும் இழந்து விடுவதால் அத்தீ கணிசமான நாசத்தை உண்டாக்கி பின்பே அழிக்கிறது.

9. சுய சந்தேகத்தைவிட பிறரால் உருவாகும் சந்தேகள் அதிகமாகப் பாதிக்கக் கூடியது. ஏனென்றால் சுய சந்தேகத்தில் இருக்கும் பாதுகாப்பு பிறரால் உருவாக்கப்படும் சந்தேகத்தில் இருப்பதில்லை. தன் மனைவியின் நடத்தை பற்றி சுயசந்தேகள் கொள்பவன் அச்சந்தேகம் உண்மையாகும் போது வேதனைப்பட்டாலும் மற்றவர்களுக்குத் தெரியாத பட்சத்தில் ஓரளவு ஆறுதலடைகிறான். நிதானப்படவும் முயல்கிறான். ஆனால் அதே சந்தேகத்தை மற்றவர்கள் உருவாக்கி உண்மையாகவும் இருந்துவிடும் பட்சத்தில் அவனது கவலை அதிகமாகிறது. மற்றவர்களுக்கு தெரிந்து விட்டதால் உண்டாகும் அவமானம் அவனை வதைக்கிறது. நிதானப்பட முடியாமல் தவிக்கிறான். சிலர் வெறிக்கும் ஆளாகிறான்.

10. வாழ்க்கை என்பது நாம் உணர்கிற அனுபவம் அல்லது அனுபவிக்கும் உணர்வே தவிர சமூகமும் சம்பிரதாயமும் சொல்லி வைத்துள்ள அமைப்பல்ல.

11. கெடுப்பவர் கெடுத்தால் கடவுளும் கெடலாம். ஒரு பிரச்சனையை முறியடிப்பது என்பது அதைச் சமாளிக்க முயல்வோரின் திறமையைப் பொறுத்து என்று சொல்வதைவிட அது எப்படிப்பட்ட நோக்கத்தில் உருவாக்கப்பட்டது என்பதைப் பொருத்து என்று சொல்வதே சரியானது. வெறும் பிடிவாத்ததால் பிரச்சனையை துவக்குகிறவனை எப்படிப்பட்டவனாலும் எளிதில் மாற்றிவிட முடியாது. பிரச்சனைக்காகவே பிரச்சனையை உண்டாக்க்கிறவன் கொஞ்சத்தில் அசைந்து கொடுக்க மாட்டான்.

12. ஒரு காரியத்தில் தோல்வியும் ஏமாற்றமும் தடைகளும் குறுக்கிடும் போது அறிவு பூர்வமாய் இறங்கியவர்கள் லட்சியமாக எண்ணித் தொடர்கிறார்கள். மற்றவர்களோ அவற்றால் அலட்சிப்படுத்தப்பட்டு அகன்று விடுகிறார்கள்.

13. தன் சுயநலத்தை மதித்து செயல்படும் எந்த மனிதனாலும் பிறர் குடும்பத்தை கெடுக்காமல் இருக்க முடியாது என்பதும் பிறர் குடும்பத்தை கெடுக்கும் எந்த மனிதனும் நிம்மதியாக இருக்க முடியாது என்பதும் மனித வாழ்க்கையின் அடிப்படை உண்மைகள்.

-- 'மனவிலங்கில்' உதயணன்

Tuesday, March 15, 2011

மழை வலுத்து விட்டது

மழை மேலும் வலுத்து வரும்போல் தோன்றியது. ஜில்லென்று ஈரக்காற்று மண் மனத்தோடு கலந்து உடல் முழுதும் பூசிச் சென்றது.

வீட்டின் வாயிற்படியில் நானும் என் மகளும் அமர்ந்திருந்தோம்.

அப்பா... அப்பா.... என்று இரண்டு முறை என்மகள் அழைத்த குரல் என்னை மாய எண்ண உலகில் இருந்து இழுத்து வந்தது.

என்னம்மா!!! என்றேன்.

“அப்பா மழை எங்கிருந்து வருகிறது?”, என்றாள் மெதுவாக.

“அது வானத்திலிருந்து வருகிறதம்மா”, என்றேன்.

“அங்கே எப்படி அப்பா மழை சென்றது”, என்றாள்.

“கடலில் இருக்கும் நீர் வெப்பத்தால் ஆவியாகி மேலே செல்கிறது. பின்னர் அது காற்றால் குளிர்விக்கப்பட்டு மேகமாகி பின்னர் மழையாக பொழிகிறது”, என்றேன்.

“அப்படின்னா அன்னைக்கு வருண பகவான் அருளால் தான் மழை பொழிகிறதுன்னு சொன்னீங்க”. என்றாள்.

கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். எங்கேயோ ஏடா கூடமாக மாட்டிக் கொண்டோமோ என்று யோசித்தபடி “ அது நம்முடைய நம்பிக்கை அம்மா, ஆனால் உண்மையில் மழை கடல்நீர் ஆவியாவதால் தான் உருவாகிறது நீ அறிவியல் மூலம் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சி செய்”, என்றேன்.

“அப்படியென்றால் நம் நம்புவது எல்லாம் பொய் தானா அப்பா?. கடவுள் வந்து எதையும் செய்யமாட்டார் தானே? என்றாள்.

அதிர்ச்சியாக அவளைப் பார்த்தேன்.

“அப்படியெல்லாம் சொல்ல முடியாதம்மா, நம்முடைய கடின உடல் உழைப்போ, உண்மையான நேர்மையான முயற்சியோ ஏதும் பலிக்காத சில சிக்கலான தருணங்களில் இறைவனை நம்புவதைத் தவிர வேறு வழியில்லையம்மா”.

“போன வாரம் ஆத்தாவக்கு உடம்பு சரியில்லாதப்போ நீங்க எத்தனை டாக்டரைப் பார்த்து என்னனென்வெல்லாம் செஞ்சீங்க. கடவுளே அவங்கள கூப்பிட்டுக்காதேன்னு கதறி அழுதீங்களே அப்பா, ஆனா மறுபடியும் ஆத்தா சாமிகிட்ட போயிட்டாங்கன்னு சொன்னீங்களே. அப்ப நீங்க உண்மையா முயற்சி ஏதும் செய்யலையாப்பா, இல்லை நீங்க சொல்லியும் கேட்காம கடவுள் ஆத்தாவ வரச்சொல்லிட்டாராப்பா” என்றாள்.

படீரென்று ஒரு இடி இடித்தது போல் இருந்தது. மனம் விக்கித்துப்போய் அமர்ந்து விட்டது. கொஞ்ச நேரம் ஏதும் பேச முடியவில்லை. அவள் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எனக்கே சந்தேகமாகப் போய்விட்டது. உண்மையிலேயே என்னுடைய முயற்சி நேர்மையானதாக இல்லையா அல்லது என் மகள் சொல்வது போல் கடவுள் ஏதும் செய்வதில்லையா?. மனம் அமைதியுறாமல் தத்தளித்தது. காலம் காலமாய் போற்றிப் பாதுகாத்து வந்த நம் மத நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் முட்டாள்தனமாய் பின்பற்றப் பட்டது தானா?. தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கையில் நம்மையெல்லாம் காக்க இறைவன் வருவான் என்று நம்பும் நாம் எல்லோரும் முட்டாள்களா? . கடவுள் அங்கிங்கெனாதாடி எங்கும் நிறைந்திருக்கிறான். காற்றை காண முடியாதது எப்படியோ அதுபோல அவனை காண முடியாது. உணரத்தான் முடியும் என்றெல்லாம் சொல்கிறார்களே எல்லாமே இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தானா?. யாருமே இல்லாத ஒரு காட்டில் தனியாக மாட்டியிருக்கும் ஒருவன் மேலே நடப்பதற்காக நம்மை விட மிகப்பெரும் சக்தி நம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் தைரியமாக நடக்கிறானே, அந்த தைரியத்தை வரவழைத்துக் கொள்ளவும் பயத்தை போக்கவும் ஒரு கைத்தடியாக மட்டுமே கடவுள் இருக்கிறாரா?. உண்மை தான் என்ன?. நிலை கொள்ளாமல் எண்ணங்கள் அலைந்த படியே இருக்க மீண்டும் என்னை நினைவுலகிற்கு அழைத்து வந்தாள் என் மகள்.


“அப்பா....அப்பா....அப்பா.... இங்க பாருங்கப்பா... ஆத்தா சாமிகிட்டப்போயிட்டாங்கன்னு சொன்னீங்களே, மறுபடியும் எப்ப வர்றேன்னு சொல்லியிருக்காங்க, எப்படியாவது பரிட்சை லீவு ஆரம்பிச்ச உடனே வரச் சொல்லுங்கப்பா எனக்கு நிறைய பாட்டு சொல்லித் தரேன்னு சொல்லியிருக்காங்க”. என்றாள்.

மனம் குமுறியது. கண்ணில் நீர் முட்டிக் கொண்டு வந்ததை அடக்கியபடி. சொன்னேன் “இனி ஆத்தா இங்க வரமாட்டாங்கடா. சாமிகிட்ட போய்ட்டா அவரு அவங்கள திருப்பி அனுப்ப மாட்டார்டா” என்றேன்.

“என்னப்பா சொல்லறீங்க. சாமி அவ்வளவு மோசமானவரா அப்பா, அவங்கள திருப்பி அனுப்பவே மாட்டாராப்பா”. என்றாள் சோகமாக.

இப்போது நான் விழித்துக்கொண்டேன். தெரியாத விஷயங்களைத் தெரியாது என்று சொல்வதை விட, 'அப்படி இருக்கலாம், இப்படி இருக்கலாம்' என்று தப்பித்துக் கொள்வது புத்திசாலித்தனம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

“கடவுள் நல்லவரா மோசமானவரான்னு எனக்குத் தெரியலைம்மா, ஆனால் அவரு கூப்பிட்டு போயிட்டாங்கன்னா திருப்பி அனுப்பமாட்டார்டா?” என்றேன்.

“சரிப்பா, அவரு எப்படியோ இருந்திட்டு போகட்டும், லீவுக்கு ஆத்தவப் பாக்க நாம அங்க போலாமா?” என்றாள்.

இவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை. இல்லை நாம் தான் எதையும் சரியாக புரிந்து கொள்ளவில்லையா என்றும் தெரியவில்லை.

“அங்கெல்லாம் அவரு கூப்பிட்டாத்தான் போகனும், நாமாப் போக முடியாதும்மா”. என்றேன்.

“என்னப்பா சொல்லறீங்க, மறுபடியும் நான் எப்பத்தான் ஆத்தாவ பார்க்கிறது” என்று சினுஙகினாள்.

“கடவுள் நம்மையும் ஒரு நாளைக்கு கூப்பிடுவாரு அப்ப போய் பார்த்திக்கலாம்டா” என்றேன்.

“என்ன சொல்லறீங்கன்னே புரியலைப்பா” என்றாள் பரிதாபமாக.

எனக்கும் தான் ஏதும் புரியவில்லை மகளே. எந்த விஷயமும் புரிந்து கொள்ளும் நிலையில் இங்கே வைக்கப்படவில்லை. எல்லாமே குழப்பமாகவே வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எல்லாவற்றையும் புரிந்து கொண்டதாய் நாம் அடிக்கும் தம்பட்டங்களை நாமும் நம்பி அடுத்தவரையும் நம்ப வைத்து எதையோ செய்து கொண்டிருக்கிறோம். மருத்துவம் முன்னேறி விட்டது என்று மருத்துவத்தை நம்பி அம்மாவை இழந்தாகி விட்டது. அறிவியல் முன்னேறி விட்டது என்று அறிவியலை நம்பினாலும் இயற்கை சீற்றங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நம்முடைய முன்னேற்றங்களுக்கு எப்போதும் ஒரு எல்லை இருந்து கொண்டே இருக்கிறது. அதை உடைக்கும் போது இன்னொரு எல்லை வநது விடுகிறது. சிந்தனை தாறுமாறாக ஓடிக் கொண்டே இருந்தது,

என் நீண்ட அமைதியைக் கண்டதும் மேலும் என்னை தொந்தரவு செய்யாமல் எழுந்து உள்ளே சென்று விட்டாள் விடையறியாக் கேள்விகளுடன்.

நாமும் அலைகிறோம் நிறையக் கேள்விகளுடன் ஒரு குழந்தையின் ஞானம் கூட இல்லாமல்.

மிக வேகமான காற்றுடன் மழை வலுத்து விட்டது.

Thursday, February 24, 2011

தாயெனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடிக் கிளியே....


அம்மா என்பது வார்த்தையில்லை. அது ஒரு உணர்வு. அது எல்லாவுயிர்க்குமான சந்தோஷம், அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு இன்னும் என்னவேண்டுமானாலும் சொல்லலாம்.

என் அம்மா தன் தாய் தந்தைக்கு பிறந்த 5 குழந்தைகளில் இரண்டாவது மகள். எல்லோருக்கும் பிறப்பு நன்றாக அமைவதே ஒரு வரம் தான்.

ஆனால் என் தாயும் அவரின் அடுத்த சகோதரனுக்கும் பிறவியிலேயே கண்பார்வை குறைபாட்டுடன் பிறந்தனர். கண்ணிற்கும் மூளைக்கும் இடையே ஓடும் நரம்பு உறுதியில்லாததால் ரத்தம் சரியாக ஓடுவதில்லை. அதனால் விழிகளை ஆட்டிக்கொண்டே இருந்தால் தான் ஓரளவு நன்றாக கண்பார்வை தெரியும்.

குடும்ப வறுமையின் காரணமாக எல்லோரும் உழைக்க வேண்டியிருந்தது. என் தாய் வெளியே செல்ல முடியாததால் வீட்டு வேலைகள் அனைத்தும் அவரின் தலையில் தான். எல்லாவற்றையும் திறம்பட சமாளித்தார். கூடவே மூன்றாம் வகுப்பு வரையோ ஏதோ படித்தார்.


அந்த காலத்திலேயே கிட்டத்தட்ட எல்லா மருத்துவரிடமும் என் தாத்தா பரிசோதித்த சரிசெய்ய முடியவில்லை.


பருவத்தில் திருமணம் மிக பிரச்சனையானது. நல்ல வரன் அமையவில்லை. அப்போது என் அப்பா தாய் தந்தையை இழந்தவர். ஈரோட்டில் ஒரு திரையரங்கில் டிக்கெட் கிழித்தபடி வாழ்க்கையை கழித்துக் கொண்டிருந்தவர். அம்மாவிற்கு தூரத்து உறவினர். எனவே அவரின் உறவினரிடம் பேசி திருமணம் முடித்தனர்.


திருமணம் முடிந்தும் ஒரு நாலைந்து வருடங்கள் தாத்தா வீட்டிலேயே தொழிலுக்கு உதவி செய்து கொண்டு காலத்தை தள்ளினர்.


கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதாரத்தில் வளர்ந்த என் தாத்தா என் தாய் தந்தைக்கு தனியாக வீடு கட்டி அதில் ஒரு மளிகைக் கடையும் வைத்துக் கொடுத்தார்.


சஷ்டி விரதம் இருந்து ஏழு வருடங்கள் கழித்து நானும் எனக்கு பிறகு 6 வருடங்கள் கழித்து என் தம்பியும் பிறந்தோம்.


நன்றாக ஓடின வாழ்க்கையில் என் தந்தையின் தொழிலில் தொய்வு ஏற்பட நான் வேலை பார்க்க வர சரியாக இருந்த்து. அதிலிருந்து என் தந்தை தொழில் செய்வதையே விட்டு சும்மா இருக்க ஆரம்பித்தார்.


மீண்டும் பொருளாதாரப் பிரச்சனைகள் தலை தூக்கியது. என் தாயின் நகைகள் அனைத்தையும் விற்றார். வீட்டில் எந்த பொருளும் இல்லை என்ற அளவிற்கு எல்லாவற்றையும் விற்றார். எனக்கும் பெரிதாக ஒன்றும் வருமானம் இல்லாத நிலை. நிறைய தொந்தரவுகளுக்கு இடையே என் தாயின் கண்பார்வை குறைவு அதிகரித்தது.


என் பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் பதினொன்றாம் பனிரென்டாம் வகுப்புகள். காலையில் 4 மணிக்கு எழுந்து இருட்டில் தடுமாறியபடி ஸ்டவ்வில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு 7 மணிக்குள் கொண்டு போக சாப்பிட எல்லாம் தயார் செய்து விடுவார். எனக்கு 7,30 க்கு பஸ். ஒருநாள் இரண்டு நாட்கள் இல்லை. இது இரண்டு வருடங்களாக செய்தார் துளி சங்கடமில்லாமல்.


ஒருமுறை என் தந்தைக்கும் தாய்க்கும் ஒரு சின்ன பிரச்சனை. இரண்டு பேரும் பேசிக்கொள்ளவில்லை. அந்த சமயத்தில் பூரி சுட வைத்திருந்த எண்ணெய் என் அம்மாவின் வயிற்றில் கொட்டி வயிறெங்கும் புண். தனியாக மருத்துவரிடம் செல்ல முடியாமலும் அப்பாவிடம் பேசமுடியாமலும் அதை அப்படியே விட்டு விட்டார். இரண்டு நாள் கழித்து தான் யத்தோசையாக அதைப்பார்த்து அதிர்ந்து விட்டேன். எனக்கும் சரியான விவரம் இல்லாத வயது. எண்ணை வைத்தால் சரியாகி விடுமென்று என்னிடம் கூறிவிட்டார். பின்னர் அது என்ன ஆனது என்றே தெரியவில்லை.


ஒருநாள் சிறுக சிறுக தனியாக சேர்த்து வைத்திருந்த பணத்தை என்னிடம் கொடுத்து எண்ணச் சொன்னார். கண் சரியாக தெரியாத என் தாயிடம் ஒரு துளி கூட ஏமாற்றக் கூடாது என்று ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து அம்மாவிடம் சொல்லி அப்படியே கொடுத்தேன்.


இதை வைத்து ஒரு கேஸ் ஸ்டவ் வாங்கிக் கொள்ளாலம்டா என்னால ஸ்டவ்வை சரி பண்ணி பண்ணி சமைக்க முடியவில்லை என்று அவர் பரிதாபமாக சொல்லும் போது எனக்கு வலித்த்து. அப்போதெல்லாம் கேஸ் வாங்க எழுதி வைக்க வேண்டும். பின்னர் ஒரு வருடம் இரண்டு வருடம் காத்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் காத்திருக்கவில்லை. உடனே தட்கால் கோட்டாவில் Rs.10000 கட்டி வாங்கிக் கொடுத்தேன். எனக்கு வேலை செய்யும் இடத்தில் பணம் கொடுத்தார்கள் என்று என் தந்தையிடம் கூறி அந்த பணத்தை என் சம்பளத்தில் பிடித்து என் தாயிடமே திருப்பி கொடுத்தேன்.


ஒரு துளி நகை கூட இல்லாமல் இருந்த என் அம்மாவிற்கு ஒரு செயினாவது செய்ய வேண்டுமென்று ஆசை. திரும்பவும் தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்தார். நான்கு பவுனில் ஒரு நகை செய்து தந்தேன். அதை அதிகபட்சம் ஒரு இரண்டு மாதங்கள் போட்டிருப்பாரா என்பது சந்தேகம் தான். என் தந்தைக்கு எப்படி உறுத்தியதோ தெரியவில்லை, வாடகைக்கு விட்டிருந்த கடைக்கு பந்தல் போடவேண்டும் என்று நகையை விற்று பந்தல் போட்டு விட்டார்.


எத்தனை பிரச்சனை இருந்தாலும் வந்தவரை உபசரிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான். என் வீட்டிற்கு வந்து குறைந்த பட்சம் ஒரு காப்பி குடிக்காமல் நீங்கள் வெளியேற முடியாது. இன்று வந்தால், நீங்கள் வாங்கிக் கொடுத்தாலும் என்னால் குடிக்க முடியாது.


எனக்கு திருமணம் நடந்து ஐந்து வருடங்கள் ஒரே வீட்டில் இருந்தேன். பின்னர் சில பிரச்சனைகளுக்காக தனிக்குடித்தனம் போக வேண்டி வந்த்போது என் தாய் தந்தையின் சம்மதத்துடன் அருகிலேயே குடியேறினேன். அதற்கு பிறகு மூன்று வருடங்கள் வரை அதே ஊரில் இருந்து பார்த்துக் கொண்டேன்.


இடையில் சிக்கன்குனியா காய்ச்சலால் அம்மாவிற்கு கொஞ்சம் இருந்த பார்வையும் முழுதாய் பறிபோனது.


மேலும் சில காரணங்களுக்காக ஈரோட்டில் குடியேற நேர்ந்த போது என் தம்பியின் திருமணமும் நடந்த்து. என் தம்பி சில பொருளாதாரப்பிரச்சனைகளால் திருப்பூர் செல்ல நேர்ந்த போது தான் என் அம்மா தன் தனிமை வாழ்க்கையை உணர்ந்தார்.


என் அப்பாவும் அடிக்கடி வெளியே சென்று விட அந்த வீட்டிற்குள்ளேயே வெளியே வர முடியாமல் காலந்தள்ள நேரிட்டது. என்னிடமிருந்து தினமும் மூன்று நான்கு முறை செல்லும் போன் அழைப்புகள் கூட அவரை சமாதானப்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்.


சென்ற ஜனவரியில்(2010) ஆரம்பித்தது ஒரு பிரச்சனை. வாயில் உமிழ்நீர் கெட்டியாக வருகிறது அல்லது கசப்பாக இருக்கிறது என்று. உமிழ்நீரை விழுங்க முடியாமல் தடுமாறினார். பல் சொத்தை இருப்பதால் இருக்கலாம் என்று பல் பிடுங்கினோம். மௌத் வாஷர் லிக்கிவுட் உபயோகித்தும் போகவில்லை. இது சம்பந்தமாக நிறைய பல் டாக்டரை சந்தித்தோம். பாலசி மூலமாக நம் பதிவர் ரோஹிணி சிவா மேடமிடம் ஆலோசனைகளைப் பெற்றேன்.


ஒரு கட்டத்தில் பல் டாக்டரை விடுத்து ENT டாக்டரிடம் செல்ல ஆரம்பித்தோம். அது சம்பந்தமாக ஸ்கேன் செய்து பார்த்தும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்டர்நெட் மூலமாக pathology டாக்டர் ஈரோட்டில் யார் இருக்கிறார்கள் என்று அறிந்து அவரிடமும் சென்றோம்.


நடுவில் ஹோமியாபதியில் நிவாரணம் கிடைக்குமா என்று அதிலும் தேடினோம், சிலசமயம் எனக்கு சந்தேகம் இவர்கள் உமிழ்நீர் அப்படி வருவதாக நினைத்துக் கொள்வார்களோ என்று? ஒரு சைக்காலஜி டாக்டரையும் பார்த்தேன்.


பிரச்சனை சரியாகவில்லை.


நடுவில் ஒரு மருத்துவர் யூரியா டெஸ்ட் செய்து கிட்னி பிராப்ளம் இருக்கும் செக் செய்ய வேண்டும் என்றார். ஆனால் அம்மா அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். முதலில் வாய் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்றார்.


நானும் அதை சரியாக கவனிக்காமல் மறுபடியும் டாக்டர்களிடம் படையெடுத்தோம். கோவையிலும் சென்று பார்த்தோம். அதில் ஒரு டாக்டர் முதலில் நீங்கள் கிட்னி மற்றும் கல்லீரலை செக் செய்யவேண்டும் பெட்டில் உடனே அட்மிட் ஆகுங்கள் என்றவுடன் நிலமையின் விபரீதம் உரைத்த்து.


கிட்னி டாக்டர் ஒருவரிடம் கோவையில் சென்றோம். அவர் டயாலிஸிஸ் செய்ய வேண்டும் என்றார். மீண்டும் ஈரோடு வந்து ஈரோட்டில் பிரபலமான கிட்னி டாக்டரை அனுகினோம். அவர் இப்போது டயாலிஸிஸ் வேண்டாம். ஆனால் உணவு நீர் கட்டுப்பாட்டுடன் ரத்தம் ஊற ஊசியை போட்டுக்கொண்டே வாருங்கள் என்றார். உணவு சம்பந்தமான ஆலோசனைகளை நம் பதிவர் தேவன் மாயம் அவர்களிடம் பெற்றேன். மூன்று மாதங்களாக பல ஊசிகள் போட்டும் ரத்தம் ஊறாமல் குறைந்து கொண்டே வந்த்து. டாக்டர் யாராவது ஒரு HEMATOLOGY மருத்துவரை சந்திக்கும் படி பரிந்துரைத்து விட்டார்.


HEMATOLOGY, ONCOLOGY, RADIOTHERAPHY CUM GENERAL MEDICINE முறையில் கோவையில் சிறப்பான மருத்துவர் ஒருவரை அனுகினோம். அவர் ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்து பிளட் 5 யூனிட் ரத்தம் கொடுத்தார். கொஞ்சம் நிலமை சீரானவுடன் போய் ஒரு மாதம் கழித்து வரும்படி கூறி விட்டார்.


அம்மாவிற்கு உடலில் என்ன பிரச்சனை என்று கேட்டபோது cancer சம்பந்தமாக எதுவும் இல்லை ஆனால் சில பிரச்சனைகள், எலும்பு மஜ்ஜையிலும சில பிரச்சனைகள் என்றார்.


வீட்டிற்கு வந்து சரியாக 20 நாட்கள் மயக்கமடைந்து விட்டார். மறுபடியும் தூக்கிக் கொண்டு கோவை அதே மருத்துவரிடம் சென்றோம். இப்போது பிளட் மறுபடியும் குறைந்திருந்தது. மயக்கம் தெளிந்து சுயநிணைவு வந்தாலும் யூரின், மலம் போவதில்லை, INTAKE மிக குறைவாக நீர்ம்மாகத் தான் இருந்த்து.


அம்மா நன்றாக பேசினார்கள். டாக்டர் முடியாது கூட்டிச் செல்லுங்கள் என்றார்.


அம்மாவை மரணம் நெருங்கிக் கொண்டிருப்பதை உணர ஆரம்பித்த போது தாள முடியவில்லை, கண்களில் நீர் மாளாமல் வந்து கொண்டே இருந்த்து.


சிகிச்சையளித்த டாக்டரின் மீதே சந்தேகம் வந்த்து. மருத்துவரின் ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு கோவையில் தெரிந்த டாக்டரிடம் எல்லோம் ஓடினோம் நானும் என் தம்பியும். முடியவில்லை.


சனிக்கிழமை (12,02,11) அன்று அம்மாவிடம் பேசினேன் முதல் முதலாக ஒரு பொய். கண் தெரியாத அம்மாவை ஏமாற்றக் கூடாது என்று இதுநாள் வரையில் கட்டிக் காத்து வந்த்தையெல்லாம் உடைத்தெறிந்தேன்.


அவர்களுக்கு நன்றாக வாழ ஆசை. சின்ன வயதிலிருந்து அவர்கள் ஆசைப்பட்டது எதுவுமே நடக்காமல் எல்லா ஆசைகளையும் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்திருந்தவர். இப்போது தான் பிறந்திருக்கும் என் ஆண் குழந்தையையும் தம்பியின் பெண் குழந்தையும் கொஞ்ச வேண்டும் என்று நிறைய ஆசை. கொஞ்ச நாள் போனால் சரியாகிவிடும். ஏதோ கெட்ட நேரம் அது விலகினால் சரியாகிவிடும் என்று மனதில் எத்தனையோ ஆசைகளை பூட்டி வைத்திருந்தவருக்கு அந்த நல்ல நாள் வராமலே போய் விடும் என்று தெரியவில்லை.


ஆனால் அந்த நம்பிக்கையை உடைக்க நான் தயாராக இல்லை. முதன் முதலாக அம்மாவிடம் பொய் சொன்னேன். அம்மா கிட்னி ப்ராப்ளம் தான் மட்டும் தான் இப்போதைய பிரச்சனை, அது ஈரோட்டிற்கு சென்றே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று டாக்டர் சொல்லிவிட்டார் அதனால் ஈரோடு செல்ல்லாம் என்று சொன்னேன். நான் சொன்னதை அப்படியே நம்பும் என் தாயும் அதற்கு ‘சரி’ என்றார்கள்.


உடனே வீட்டிற்கு சென்றால் அம்மாவின் நிலை கண்டு ஊரில் வருபவர்களெல்லாம் கண்ணீர் விட்டு அழுதால், தான் மரணம் அடையப்போகிறோம் என்பதை உணர்ந்து நொந்து விடுவார்கள். அதனால் ஈரோட்டில் ஓரிடத்தில் (ஒரு ஆஸ்பிட்டல் மாதிரி) கொண்டு வந்து சேர்த்தோம். அங்கே சரியாக மூன்று நாட்கள் இரவு பகல் என்று பாராமல் வலியிலும் வேதனையிலும் ஐயோ அம்மா என்று கதறினார்கள்.


ஐயோ அம்மா என்று சொல்லாதே அம்மா, நீ விரதமிருந்து வணங்கும் முருகனை நிணைத்து முருகா முருகா என் வேதனைகளைக் குறை என்று சொல் அம்மா என்றேன்.



அரை மயக்க நிலையிலும், நீ என்ன சொல்கிறாயோ அப்படியே சொல்கிறேன் என்று முருகா முருகா என்று கூவினார்கள்.


ஆயிற்று அந்த நாளும் வந்தது. செவ்வாய்கிழமை(15,02,11) காலை தன் முழநிணைவை இழந்தார்கள். ஆனால் உயிர் பிரியவில்லை. மணி 8, 9, 10, 11, 12 ஆகிக்கொண்டே இருந்த்து. மூச்சு வந்து கொண்டேதான் இருந்தது வலியின் வேதனையான அரற்றலோடு. மூன்று மணிக்கு வீட்டிற்கு எடுத்து செல்ல முடிவு செய்து வீட்டை அடையும் போது மணி 4.00. வீட்டை அடைந்தவுடன் வேதனை முனகல்கள் குறைந்தது. சரியாக ஒரு மணிநேரம் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிரிந்த போது மணி 5.00.


மனதில் தாங்க முடியாது வலி. என்னையே முழுதாக நம்பி இருந்த என் தாயை, தன் மகன் எப்படியும் பிரச்சனைகளை சரி செய்து விடுவான் என்று ஒரு கடவுளைப் போல என்னை நம்பிய ஒரு குருட்டு அன்னையை, உன் கண்களைப்போல உன் எண்ணங்களும் குருடம்மா என்று நானே ஏமாற்றி விட்டேன்.


இன்னமும் சரியாக செய்திருக்கலாமே என்று மனம் என்னை வதைத்துக் கொண்டே இருக்கிறது. நானே நிறைய தவறு செய்திருக்கிறேன். அவர்கள் தனிமையை குறைத்து இருக்கலாம். இன்னும் கொஞ்சம் கவனித்து பார்த்து இருந்திருக்கலாம். கடைசியாக பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறேன்.


எந்த தவறுக்கும் நான் என் அன்னையிடம் மன்னிப்புக் கோரப்போவதில்லை அதற்கான தண்டனையும்
பெறத் தயாராகவே இருக்கிறேன்.

என் அன்னையின் ஆன்மா சாந்தியடைய மனதார விரும்புகிறேன்.









Monday, February 7, 2011

அவதார் ............

பள்ளியில்
எல்லோரையும் விட

குள்ளமானவன் என்பதால்

கொஞ்சம்

செல்லமானவன் கூட

வாமணன் என்பது

என் பெயர்.


தோட்டக்கலை ஆசிரியர்

தோட்டவேலை செய்ய

எல்லோருக்கும்

இடம் ஒதுக்கும்போது

என்னையும் கேட்டார்

உனக்கு
எவ்வளவு இடம்

வேண்டுமென்று?


சார் என் காலில்

மூன்றடி போதுமென்றேன்

வழக்கம் போல.


பின் பெஞ்ச்

சுக்கிரன் கத்தினான்

சார், அவன் உங்களை

ஏமாற்றிவிடுவானென்று.


சுண்டுவிரலால்

அவன் கண்ணில்

குத்தவும்

அமைதியாய் அகன்றான்


ஆசிரியரோ

எடுத்துக்கொள் என்றார்.


முதல் அடியை அளக்க

காலை உயர்த்தினேன்

உலகத்தை ஏற்கனவே

அளந்து விட்டனர்

196936481 சதுர மைல்

விண்ணை அளக்கலாம்

என்றால்

அது வளர்ந்து கொண்டே

போகிறது.

நேரமாகி விடும்

பெல்லடித்து விடுவார்கள்


காலை மடக்கி

மூன்றடி அளந்தேன்

நிலத்திலேயே.


ஆசிரியர் புன்னகைத்தார்

அவர் தலை தப்பியது

எல்லோருக்கும்

இடம் கொடுத்தாகிவிட்டது,


சுக்கிரனுக்கோ

கண்ணில் வலி.

நமக்கோ நெஞ்சில்

அவதார் சினிமா தானோ?

Thursday, February 3, 2011

கல்கி வரட்டும்.....

ராமனும் சீதையும்
காட்டிற்கு சென்று
தேடியும்
விறகு கிடைக்கவில்லை

பிருந்தாவன்
பூங்கவானதிலிருந்து
கிருஷ்ணனும் வருவதில்லை

அக்னி முறுக்கு கம்பிகளால்
தூண்கள்
கெட்டியாகிவிட்டதால்
நரசிம்மராலும்
ஒளிய முடிவதில்லை

கோடாரியை
பழைய இரும்பிற்கு
போட்ட பரசுராமனுக்கும்
கதையை
பாதி விலைக்கு விற்ற
பலராமனுக்கும்
தொழில்களில்லை

மற்றபடி
கல்கி வந்தால்தான்
எல்லோருக்கும் நிம்மதி
அவனுக்கு
ஐ,டி கம்பெனியில்
பெரிய வேலையாம்
சம்பளமே பெரியதொகை
ஆனால்
குதிரையில் தான்
வருவானாம்

Thursday, January 20, 2011

மரம் வளர்க்கலாம் வாங்க......

அன்பு நண்பர்களே மரம் வளர்க்கறதினால என்ன பயன் அப்படின்னு நம்ம எல்லோருக்கும் தெரியும். அதனால சும்மா பேசிட்டிருக்காமா அடுத்த கட்ட நடவடிக்கையில இறங்க ஒரு வாய்ப்பு. வீட்டு பக்கத்தில கொஞ்சம் இடமிருந்தோ அல்லது வீட்டு முன்னாடியோ மரம் நட்டு வளர்க்களாம்னு எண்ணமிருக்கிற ஈரோடு அதை சுத்தி இருக்கிற மக்களுக்கு ஒரு வாய்ப்பு.

ஈரோடு விருட்சம் அறக்கட்டளை சார்ந்த நண்பர்கள் உங்க வீட்டிலேயே வந்து இலவசமா மரத்தை நட்டு தர்றாங்க. அதை பக்குவமா வளர வைக்க வேண்டியது நம்ம பொறுப்பு. அவ்வளவுதான்.

அந்த அமைப்போட விலாசம் மற்றும் போன் நம்பர் கீழே கொடுத்திருக்கறேன்.

ஈரோடு விருட்சம் அறக்கட்டளை
26, சொக்கநாதர் வீதி,
ஈரோடு – 638 001
Ph: 94420 58553

எல்லோரும் பயன்படுத்தி பலனைடைவோம்.












Friday, January 14, 2011

துறவியும்.... திருடனும்....

ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். எங்காவது திருடலாம் என்று ஒரு காட்டு வழியே சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு மரத்தடியில் ஒரு துறவியை சந்தித்தான். அவரிடம் எதுவும் இருக்காது என்று தெரிந்தாலும் சரி வந்ததுக்கு எதையாவது பிடுங்கிக்கலாம் என்று கத்தியை காட்டி மிரட்டினான்.

புன்முறுவல் பூத்த துறவி “உனக்கு என்னப்பா வேண்டும்”. என்று கேட்டார்.

அவரை ஏளனமாக பார்த்தபடி திருடன் சொன்னான் “ எனக்கு மூட்டை நிறைய தங்கம் வேண்டும் கொடுப்பாயா” என்றான்.

உடனே துறவி “ இவ்வளவு தானே, இங்கிருந்து அரைக்கல் தொலைவில் ஒரு மரம் இருக்கிறது. அதனடியில் நிறைய தங்கம் இருக்கிறது போய் எடுத்துக் கொள்” என்றார்.

அவரை சந்தேகமாக பார்த்தபடி சென்றவன் ஆச்சரியபட்டு போனான். அவர் சொன்னது போலவே அந்த மரத்தடியில் தங்க நாணயங்கள் குவியலாக இருந்தன. உடனே ஒரு மூட்டையில் அள்ளிக் கொண்டு வந்தவன், வரும் வழியில் சாமியாரைப் பார்த்தான்.

அவர் அமைதியாக இவனைப்பார்த்து “என்னப்பா தங்கம் கிடைத்த்தா” என்று சாதாரணமாக கேட்டார்.

உடனே இவனுக்கு மீண்டும் சந்தேகம் இதைவிட பெரிய விஷயம் ஏதோ இவரிடம் இருக்கிறது என நிணைத்து “ ஐயா இதைவிட மேலாக வைரம் போன்றவை எங்காவது இருக்கிறதா?” என்று கேட்டான்.

துறவி சொன்னார் “இங்கிருந்து ஒரு கல் தொலைவில் ஒரு பாழடைந்த மண்டபம் இருக்கிறது. அங்கே போனால் வைரம் நிறைய இருக்கிறது என்றார்.

பரபரப்பான திருடன் மீண்டும் ஒரு சாக்கை எடுத்து கொண்டு ஓடி வைரம் ஒரு மூட்டை அள்ளி வந்தான்.

ஆனாலும் திருப்தி ஆகாமல் “ ஐயா இதைவிட வைடுரியம் போன்றவை எங்காவது இருக்கிறதா?” என்று கேட்டான் துறவியிடம்.

துறவி சொன்னார் “இங்கிருந்து இரண்டு கல் தொலைவில் ஒரு மலை இருக்கிறது. அங்கே போனால் வைடுரியம் நிறைய இருக்கிறது என்றார்.

மீண்டும பரபரப்பான திருடன் மீண்டும் ஒரு சாக்கை எடுத்து கொண்டு ஓடி வைடுரியத்தையும் அள்ளி வந்தான்.
ஆனாலும் திருப்தியடையாமல் இந்த ஆள் இதெல்லாம் வேண்டாம் என்று அமர்ந்திருக்கிறார் என்றால் இதையெல்லாம் விட மிகப்பெரிய விஷயம் என்னவோ இவரிடம் இருக்கிறதென்று அவரிடம் சென்று அமர்ந்து அதைப்பற்றி கேட்டான்.

உடனே சிரித்தபடி துறவி அவனுக்கு தவம் செய்து ஆண்டவனை அடைவது தான் இதெல்லாம் விட சிறந்த மகிழ்ச்சியான விஷயம் என்று அவனை அருகில் அமர்த்தி தவம் செய்ய கற்றுக் கொடுத்தார்.

.
.
.
.
.
.

இரண்டு நாள் கழித்து திருடனின் மகன் அந்த வழியாக வந்தவன் இருவரையும் பார்த்தபடி அருகில் சென்றான். துறவியிடம் சென்று நடந்ததை கேட்டான். பின்னர் அருகில் இருந்த மூன்று மூட்டைகளையும் எடுத்துக் கொண்டு வந்த வழியே திரும்பினான்.

உடனே துறவி அவனை அழைத்து “குழந்தாய் இவையெல்லாம் வெறும் கற்கள், இவற்றைவிட மேலான விஷயங்களை நான் உனக்கு சொல்லித்தருகிறேன் கற்றுக் கொள்கிறாயா?” என்றார்.

திருடனின் மகன் சொன்னான் “ஐயா என் அம்மா வரும்போதே சொல்லிவிட்டார்கள், வேலையில்லாத வெட்டிப்பயலுக எதையாவது சொல்லிட்டு இருப்பாங்க, உங்கப்பன் அதை உக்காந்து கேட்டுட்டு இருப்பான். நீயாவது பொறுப்பா போனமா, போன வேலைய முடிச்சமான்னு வீடு வந்து சேருன்னு சொல்லிருக்காங்க, நான் வரட்டுங்களா ஐயா”, என்று மூட்டையை தூக்கிய படி நடையை கட்டினான்.

துறவி அவனைப்பார்த்து திகைத்து நின்றார்.


••••••••••••••••••••••

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Thursday, January 13, 2011

மார்கழி காலைகள்

அதிகாலை
ஐந்துமணி அலாரம்...
கடிகாரம் கண்டறிந்தவனை
கண்டபடி திட்டியபின்
கொதிக்கும் வெந்நீர்
குளியல் உடம்புக்கு
வெளியே...
சுடச்சுட காப்பி உடம்புக்கு
உள்ளே...

வழக்கமான உடைகளுக்கு
மேலே ஸ்வெட்டர்
தலைக்கு குல்லா
கைக்கு உறை எனும்
முப்பெரு (தெய்வக்) காவல்

கோவில் பிரகாரம் சுற்றி
குருக்கள் தேவாரம் கேட்க
வீட்டுத் தாழ்வாரக்கதவு
சாத்தினோமாவெனுங் குழப்பம்
தீபாராதனை நடுவே
பையன் எழுந்து
பல் துலக்கினானோ
பெண் எழுந்து
பெட் காப்பி குடித்தாலோ
எனுங்கவலை

திருவாசகத்துக்கு உருகாமல்
சர்க்கரைப் பொங்கலுக்கு உருக
மலங்க மலங்க விடிகிறது
மார்கழித் திங்கள்
மதிநிறைந்த நன்நாட்கள்

Thursday, January 6, 2011

இறை..........

அதுதான் என்றால்

அதுதான்

அது இல்லை என்றால்

அது இல்லை


அதுதான் என்று

சொல்வதற்கோ

அது இல்லை என்று

சொல்வதற்கோ

இங்கே ஏதுமில்லை


ஏதுமே இல்லாத

ஒன்று

இருக்குமென்றால்

அதுதான் என்றால்

அதுதான்

அது இல்லை என்றால்

அதுவுமில்லை

Saturday, January 1, 2011

திவ்ய தரிசனம்

கோயில் வாசலில்
கால் வைத்ததும்

பார்த்தாகி விட்டது,

முழுதாகத்தான் இருக்கிறது.


வெளிப்பிரகாரம்

சுற்றுகையில்

பாதியாகி விட்டது

மனம் கொஞ்சம்

படபடத்தது


உள்பிரகாரம்

சுற்றும் போது

ஒருமுறை

எட்டிப் பார்த்த்தில்

கால்வாசியாகி விட்டது.


கருவறைக்குள்

செல்லலாமா? வேண்டாமா?

மனம் சஞ்சலத்தது

தீபாராதனை காட்டும்போது

நெஞ்சுக் கூட்டில்

மேலும் படபடப்பு

முகத்தில் ஒரு கவலை


திருநீறு பூசியதும்

ஓடிச் சென்று

அடித்து பிடித்து

அந்தக் கடைசி தருணத்தில்

வாங்கியாகிவிட்டது

பொங்கல் பிரசாதம்


கடவுளைக் கண்டேன்

இன்னைக்கு

திவ்ய தரிசனம்ங்க

என்று வழியில்

பார்ப்போரிடமெல்லாம்

சொல்ல முடிந்த்து



அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...