Saturday, December 26, 2009

கலித்தொகை

அக்கவுண்டில் வருவது
வெள்ளையாய்
அதில்லாமல் இருப்பது
கருப்பு.....

அரசாங்கம் அடித்தால்
நல்லநோட்டு
அடுத்தவர் அடித்தால்
கள்ளநோட்டு........

மேஜைக்கு மேலே வந்தால்
ஆபிஸ்ஸிற்கு
மேஜைக்கு கீழே வந்தால்
ஆபிஸ்ஸருக்கு......

ஓட்டு போடும் முன்
கவரில் வந்தது வேறு
ஓட்டு போட்ட பின்
கையில் தந்தது தனி......

லஞ்சம்,லாவண்யம்,
ஊழல், கையூட்டு,
அன்பளிப்பு, பரிசு,
டிப்ஸ்,இனாம்.....

மொத்தம் எட்டுத்தொகை
மிஞ்சியது குறுந்தொகை
அகநானூறு, புறநானூறு பேசி
அகப்பட்டால் பத்துப்பாட்டு.......

Tuesday, December 22, 2009

அணு அளவும் பயனில்லை...



உலக வெப்பமாதல் குறித்து வியத்தகு மாநா(டகம்)டு ஒன்றை டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் வெற்றிகரமாக நடத்தி கலைந்துள்ளன உலக நாடுகள்(இந்தியா உட்பட). முடிவாக எனக்குத் தெரியாது, எங்களால் முடியாது, நாங்கள் பொறுப்பல்ல, அப்படியெல்லாம் செய்யமுடியாது என்பன போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி அரங்கேற்றியுள்ளனர்.

அண்ணன் அமெரிக்காவும் இதை போன்ற நிலைகளுக்கு சீனா மற்றும் இந்திய மக்கள் தொகையே காரணம், எனவே அவர்களுக்கே முழுபங்கு என்று ஒரு மிகப்பெரிய உண்மையை உலகுக்கு சுட்டி காட்டியுள்ளது.

திருவாளர் ராஜபக்க்ஷே போன்ற சில பொதுநலவாதிகள் மட்டுமே மக்களைக் கொன்று கார்பன் டை ஆக்ஸைடு உருவாகமல் தடுத்து தனது பங்களிப்பை தந்துள்ளனர். நச்சுவாயு வெளியேற்றம் தான் மிகப்பெரிய காரணமென்றும் அதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதையும் அடுத்த நாடுகள் தான் அதை செய்யவேண்டும் என்றும் எல்லா நாடுகளுமே வலியுறுத்தியுள்ளன.

உலக வெப்பமாதலை கண்டுபிடித்த, அறிந்த, அளவிட்டு கொண்டிருக்கிற விஞ்ஞானிகள் மற்றும் அளவிள்ளாத பௌதீக அறிஞர்களை கொண்டுள்ள உலக நாடுகள் அவர்களை வைத்தே மாற்று வழிமுறைகள், சிக்கன நடவடிக்கைகளை கண்டறியாமல் அவர்களை வீட்டில் அமர்ந்து மாநாட்டு காட்சிகளை டீ.வி.யில் பார்க்கச் சொல்லி விட்டு, இவர்கள் அமைச்சர் அளவில் மாநாடு, பெரிய தலைகள் மாநாடு என்று கூல்டிரிங்ஸ் குடித்து விட்டு மக்களின் மனதில் கடல் நீரை வார்த்திருக்கிறார்கள்.

மக்களும் பாதியிலேயே டீ.வி. நிகழ்ச்சிகளை ஆப் செய்து விட்டு இவர்கள் ஏதாவது சாதித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு விஜய்யின் வேட்டைக்காரன் சினிமாவிற்கு சென்றுவிட்டனர்.

பூமி தான் வெறுமனே சூடாகிக்கொண்டேயிருக்கிறது.

Saturday, December 19, 2009

பெய்யெனப் பெய்யும் மழை

மெல்லிய தீற்றலாய்
பெய்திட்ட மழையில்
நனைந்தபடி சிறுபிள்ளையாய்
சாலை கடந்த சுகம்
பெரியவளாகியும் பசுமையாய்....

மழையில்லா நாளில்
சாலையை வெறுமனே
நிறைக்கும் காற்று.......

கற்புடை பெண்டிர்
சொன்னால் பெய்யுமாம் மழை
சொன்னேன் .....
????????????????

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...