Tuesday, July 27, 2010

எனக்குத்தான் பிடிக்கவில்லை

இந்த உடை எனக்கு பிடிக்கவில்லை. இதைத்தான் அணிய வேண்டுமென்று என் தாயும், தந்தையும் சொல்லி விட்டனர். எனக்கு விருப்பமில்லையெனினும் இதையே அணிய வேண்டியிருக்கிறது. அவர்களும் இதை விரும்பி எடுத்தார்கள் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் எடுத்ததை விரும்பி விட்டனர். எனக்குத்தான் பிடிக்கவில்லை.

தம்பியும் தங்கையும் தனக்கு கிடைத்த உடைபற்றி கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. கொடுத்ததை அணிந்து கொண்டு சந்தோஷமாய் திரிகின்றனர். விளையாடிவிட்டு வரும்போது அழுக்காக்கி விடுகின்றனர். எனக்கு என் உடை எப்போதுமே அழுக்காய்த்தான் தெரிகிறது. எத்தனை முறை நீரில் முக்கினாலும் இந்த அழுக்கு ஒரு கறையைப்போல ஒட்டிக்கொண்டு போகவே மறுக்கிறது.

குப்பைகளும், தூசிகளும் நிறைந்த இந்த உலகில் என் உடை மட்டும் எப்படி சுத்தமாக இருந்து விட முடியுமென்று மனம் தன்னையே சமாதானப்படுத்திக் கொள்கிறது.

பெரும்பாலும் என் எதிர்படுபவர் யாருக்கும் தங்கள் உடையைப்பற்றி கவலையில்லாமல் இருக்கின்றனர். எளிதில் அழுக்காகிவிடுகிறது. ஒரு நாளைக்கு தூக்கி எறிந்துவிடுவோமென்ற எண்ணம் இருந்தாலும் நிறையப்பேர் அதை அழகுபடுத்தி கொள்கின்றனர். பலருக்கு தங்கள் உடைபற்றிய பெருமை, பலருக்கு அடுத்தவர் உடை பற்றிய பொறாமை. சிலர் தங்கள் உடையையே ரசிக்கின்றனர். நிறையப்பேர் அடுத்தவர் உடையை ரசிக்கின்றனர்.

எனக்குத்தான் பிடிக்கவில்லை. பொத்தல் பொத்தலாய் இருக்கும் இந்த உடையை எத்தனை நாளைக்கு வைத்திருப்பது. ஏதாவது பட்டால் சிலநேரம் கிழிந்து விடுகிறது. சில இடங்களில் புடைத்துக்கொண்டு, சில இடங்களில் உள்ளே போயும் பார்க்க சகிக்க வில்லை.

எல்லோருமே சில நேரங்களில் தையற்காரனிடம் சென்று விடுகின்றனர். அது சரியில்லை, இது சரியில்லை என்று தங்கள் உடையில் எத்தனை குறைகள் வைத்திருக்கின்றனர். இதுதான் சமயம் என்று தையற்காரர்கள் பெருகிவிட்டனர். எனக்கு அவர்களையும் சுத்தமாக பிடிப்பதில்லை. ஒன்றை சரிசெய்து இன்னொன்றை கோனையாக்கி விடுகின்றனர்.

கிராமத்தில் இருக்கும் எனது பாட்டிகூட கூறுவாள் உடையை சுத்தமாக வைத்திரு. உடை நல்ல சுகாதாரத்தோடு இருந்தால் தான் நீண்டநாட்கள் இங்கே தங்க முடியுமென்று.

தாத்தாவும் அப்படித்தான். அவர் எப்போதும் தன் உடையை சுத்தமாக வைத்திருப்பார். தினமும் தன் உடையை சிரமப்பட்டு பராமரித்து வந்தார். என் தாத்தாவும் பாட்டியும் நீண்ட நாட்கள் கிராமத்திலேயே தங்கிவிட்டனர்.

இருந்தாலும் ஒருநாள் இரண்டுபேருமே தங்கள் உடை பிடிக்கவில்லை என்று முகம் சுழித்து தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டனர். பின்னர் அவர்களை நான் பார்க்கவே முடியவில்லை.

என் தாயும் தந்தையும் கூட அவர்கள் உடைகள் கொஞ்ச நாட்களாக பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். சலவைக்காரன் வந்தால் கொடுத்து விடலாம் அவனையும் காணோம் என்று புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.

என் மனைவியும் குழந்தைகளோ தங்கள் உடையை பொக்கிஷம் போல வைத்திருக்கின்றனர். தினமும் அதை சுத்தப்படுத்துகின்றனர். பக்கத்து வீட்டுக்காரனை விட நம் உடைகள் தான் சிறந்தவை என்று நம்புகின்றனர்.

எனக்குத்தான் பிடிக்கவில்லை. ஒரே புழுக்கமாக இருக்கிறது. எத்தனை நாளைக்குத்தான் இதை அணிவது. வெயில் காலத்தில் உள்ளே அப்படியே வெந்து விடுகிறது. குளிர்காலத்தில் நடுங்க வைத்து விடுகிறது. எந்த பருவத்தையும் தாக்குபிடிக்க முடியாத இந்த உடை எதற்கு? பொறுத்து பொறுத்து பார்த்து ஒருநாள் கழற்றி எறிந்து விட்டேன்.

ஆஹா எவ்வளவு சுகமாக இருக்கிறது. காற்று, வெயில், மழை என்று எதுவும் பாதிக்காமல் இதமாக இருக்கிறதே.

என் மனைவியும், குழந்தைகளும் ஏன்தான் நான் கழற்றிப்போட்ட உடையைச் சுற்றி நின்று அழுகின்றனர் என்றே தெரியவில்லை. . அவர்களும் ஒருநாள் கழற்றித்தானே ஆக வேண்டும்!.

29 comments:

Unknown said...

உயிர் சட்டை.. மிகவும் ஆழமான கதை ..
பொத்தல் பொத்தலாகதான் இருக்கிறது மிகப் பெரும்பான்மையோருக்கு..

Vel Tharma said...

அன்புதான் பெரியது..அழகியது..

Anonymous said...

udai - uyir

thaiyarkaran - doctor

salavaikaran - yeman

arpudhaman uvamaikal aalamana karuththukkal udayai kondu uyirai udaiththuvitteerkal. very beautiful. enkiyo poitteenga velu.
anbudan sakthi

Balamurugan said...

'காயமே இது பொய்யடா' என்ற வரி ஞாபகத்திற்க்கு வருகிறது.

அருமையான உவமைகள்.

dheva said...

கழற்றி எரிய வேண்டிய சட்டை.....

நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ்
சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே

பட்டினத்தார் சொல்லியது.


கவனமில்லாமல் அதிலேயே கருத்து வைத்து....திரியும் மானிடர்க்கு...உங்களின் கட்டுரையும் தப்பாமல் தகவல் சொல்லும் வேலு.....


உணர்ந்தேன்...! வாழ்த்துக்கள்!

Unknown said...

காயமே இது பொய்

தனி காட்டு ராஜா said...

'காயமே இது பொய்யடா'
'முடிஞ்ச வரைக்கும் என்ஜாய் பண்ணுடா '
-அப்படின்னு எங்க ஊரு ப.செ.பார்க் டுபாகூர் சித்தர் அடிகடி சொல்லுவாரு ..............

'பரிவை' சே.குமார் said...

//என் மனைவியும், குழந்தைகளும் ஏன்தான் நான் கழற்றிப்போட்ட உடையைச் சுற்றி நின்று அழுகின்றனர் என்றே தெரியவில்லை. . அவர்களும் ஒருநாள் கழற்றித்தானே ஆக வேண்டும்!.//

'காயமே இது பொய்யடா'

உணர்ந்தேன்...! வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆழமான கதை

Anonymous said...

Very Nice..

vasu balaji said...

நல்லாத்தானிருக்கு சிந்தனை:)

ஹேமா said...

உயிர்...நிரந்தரமாய் உயிர் உள்ளவரை எம்மோடு ஒட்டியிருக்கும் சட்டை.கழற்றியே ஆகவேணும்.
அருமையான கதை வேலு.

அன்புடன் நான் said...

அதுக்குள்ள அவசாரப்பட்டா எப்படி... அது அது நடக்கும் போது நடக்கும்.

சிந்தனை அழகு!

அமுதா said...

ஆழமான சிந்தனை

ஈரோடு கதிர் said...

சட்டை ரொம்ப கனம்

Chitra said...

கழற்றி எரிய வேண்டிய சட்டை.....

நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ்
சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே

பட்டினத்தார் சொல்லியது.


..... தேவா மேற்கோள் காட்டியுள்ள படி, ஆழமான கருத்தை கூட, இந்த இடுகையில், எப்படி எளிமையான நடையில் சொல்லி விட்டீர்கள்!
வாசித்து முடித்ததும், ஒரே சிந்தனை..... அருமையான பதிவுங்க... பாராட்டுக்கள்!

பனித்துளி சங்கர் said...

சிந்திக்கத் தூண்டும் கருத்துக்களை வாரி இறைத்து இருக்கிறது கதை . அருமை பகிர்வுக்கு நன்றி

mkr said...

ஒரு நாள் கழட்டிதான் ஆகனும் என்பதை உணர்த்தும் சிந்தனை மிக்க பதிவு.காய்மே இது பொய்யடா...

கனிமொழி said...

ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க........

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

எனக்கும்தான் பிடிக்கவில்லை என் சட்ட்டை..

உங்கள் வரிகள் பிடித்துபோய்...

பின்னோக்கி said...

நீர்க்குமிழி வாழ்வை அழகாக கதையாக்கியிருக்கிறீர்கள்.

Thenammai Lakshmanan said...

ஏனோ எனக்கு நான் நிரந்தரமானவன் அழிவதில்லை .. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்ற கவியரசரின் வரிகள் நினைவுக்கு வருது வேலு..

Thenammai Lakshmanan said...

ஏனோ எனக்கு நான் நிரந்தரமானவன் அழிவதில்லை .. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்ற கவியரசரின் வரிகள் நினைவுக்கு வருது வேலு..

ரிஷபன் said...

அட.. அழகாய் கொண்டு போயிருக்கிறீர்கள்

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

VELU.G said...

நன்றி கே.ஆர்.பி செந்தில்

நன்றி வேல்தர்மா

நன்றி சக்தி

நன்றி பாலமுருகன்

நன்றி தேவா

நன்றி A.சிவசங்கர்

நன்றி தனிக்காட்டு ராஜா

நன்றி சே.குமார்

நன்றி T.V.ராதாகிருஷ்ணன்

நன்றி ராதை

நன்றி வானம்பாடிகள்

நன்றி ஹேமா

நன்றி சி.கருணாகரசு

நன்றி அமுதா

நன்றி ஈரோடு கதிர்

நன்றி சித்ரா

நன்றி பனித்துளி சங்கர்

நன்றி mkr

நன்றி கனிமொழி

நன்றி தஞ்சை.வாசன்

நன்றி பின்னோக்கி

நன்றி தேனக்கா

நன்றி ரிஷபன்

நன்றி Sweatha Sanjana

Anonymous said...

உடையை எவ்வளவு கஷ்டப்பட்டு காப்பாற்ற வேண்டியிருக்கிறது..எழுத்துக்களில் கிழியாமல் அழகாய் எழுதியிருக்கிறீர்கள் உடையை..அருமை.

VELU.G said...

நன்றி படைப்பாளி

sakthi said...

எனக்குத்தான் பிடிக்கவில்லை

நண்பா கண்ணில் நீர் அருவியாக வருகிறது

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...